சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன்
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது.
கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின் மையமான விவாதமாகத் திகழ்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் 24 வது கட்சி காங்கிரஸ் மதுரையில் நடைபெறுகிறபோது மேற்கண்ட விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்திற்கு பின்னணியாக, உத்திகள் பற்றிய மார்க்சிய லெனினிய அடிப்படை புரிதலை மீண்டும் மறுவாசிப்பு செய்வது அவசியமாகிறது.
சகாப்தத்தின் நிகழ்ச்சி நிரல் சோஷலிசமே!
தொலைநோக்கு உத்தி, நடைமுறை உத்தி இரண்டும் மார்க்சியத்தின் முக்கியமான அரசியல் நடைமுறையாகவும், அறிவியலாகவும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரின் எழுத்துக்கள் இந்த அறிவியலை கற்க மார்க்சிய போராளிகளுக்கு துணை புரிகின்றன.
பாட்டாளி வர்க்கங்களுக்கு வரலாற்று ரீதியாக ஒரு கடமை உள்ளது. ஆளும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை வீழ்த்தி, அதிகாரத்தை பாட்டாளி வர்க்கங்கள் கைப்பற்ற வேண்டும். இந்தக் கடமையை தவிர்க்கவோ, அல்லது இதிலிருந்து பாதை மாறவோ கூடாது.
ஏனெனில், முதலாளித்துவம் தனது சுயநலனுக்காக சமூக வாழ்க்கையை சிதைத்து வருகிறது.ஒரு சிறு எண்ணிக்கையிலான ஆதிக்க வர்க்கங்கள் தனது இலாப, மூலதன வேட்டைக்காக, மனிதம், மற்றும் மேலான மனித நலனை அழித்து வருகிறது. எனவே வரலாற்றில் புதிய அத்தியாயமாக சோசலிசம் அமைவது மானுட வரலாற்றின் தேவை. அந்தக் கடமையை பாட்டாளி வர்க்கம் ஆற்றிட வேண்டும்.
வரலாற்று நோக்கில் பார்க்கிறபோது சோஷலிசமே இந்த சகாப்தத்தின் நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது. மார்க்சிய மூலவர்கள் இதையும் கூட கம்யூனிஸ்ட் சமுதாயம் அமைப்பதற்கான முன்னோடி அமைப்பாக சோஷலிசம் விளங்கும் என பதிவு செய்துள்ளனர்.
“ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப” என்பது கார்ல் மார்க்ஸ் 1875 ஆம் ஆண்டு கோதா திட்டத்தின் விமர்சனம் நூலில் எழுதிய உன்னதமான ஒரு சொற்றொடர். இது கம்யூனிச சமுதாயத்தின் கோட்பாடாக அமைந்துள்ளது. மார்க்சின் பார்வையில், வளர்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு உற்பத்தி செய்யக்கூடிய ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அளவில் விநியோகம் அமைந்திடும். தடையற்ற உற்பத்தி சக்திகளின் முழு வளர்ச்சி காரணமாக அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
இதன் முன்னோடியான அமைப்பு சோசலிசம். ‘ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப வேலை; அவரவர் உழைப்புக்கு ஏற்ப ஊதியம்’ என்ற கோட்பாட்டு அடிப்படையில் சோசலிசம் இயங்கும். இதில் உழைப்புச் சுரண்டல் இருக்காது.
இப்படிப்பட்ட சோசலிச அமைப்பு அனைத்து நாடுகளிலும் அமைய வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று திரண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச அமைப்பை கட்டமைக்க வேண்டும்.
தொலைநோக்கு உத்தியின் இலக்கு
சோசலிசம்தான் பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியம். இதை அடைவதற்கு ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட நிலைமைகள், வர்க்க சக்திகளின் பலம், பலவீனங்கள் ஆகியவற்றை தெளிவாக ஆராய்ந்து, வர்க்க அரசை அமைப்பதற்கான ஒரு தொலைநோக்கு இலக்கினை தீர்மானிக்க வேண்டும். இதுவே தொலைநோக்கு உத்தி எனப்படும். சோசலிசமே உடனடி லட்சியம் என்று பிரகடனப்படுத்தினால் போதாது. அதை அடைவதற்கு தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு,அடைய வேண்டிய இலக்கு நிச்சயிக்கப்படுகிறது. இதனால்தான் இதனை தொலைநோக்கு உத்தி என்று அழைக்கிறோம்.
அந்த தொலைநோக்கு உத்தியின் இலக்கு என்ன? பாட்டாளி வர்க்க அரசு அமைவதுதான். அதற்காக பாட்டாளி வர்க்கத்தோடு உறுதுணையாக நிற்கிற இதர வர்க்கங்கள் உள்ளடங்கி இருக்கிற வர்க்க அணி சேர்க்கையை உருவாக்க வேண்டும். இந்த அணி முன்னேறி, புரட்சியை சாதிப்பதுதான் தொலைநோக்கு உத்தி.
ஒரே ஒரு முயற்சியில் வர்க்க அரசை அமைத்திட இயலாது. அன்றைய காலச் சூழல், நிலவுகிற அரசியல் சூழல், பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு மட்டம் போன்றவை ஒரே முயற்சியில் வர்க்க அரசை அமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தாது. அதற்கு அவ்வப்போது உடனடி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். முறியடிக்க வேண்டிய எதிரிகளையும், அணிசேர்க்க வேண்டிய மக்கள் பிரிவுகளையும் அவ்வப்போது முடிவு செய்தல் வேண்டும். இதுவே தற்போதைய அரசியல் நடைமுறை உத்தி எனப்படும்.
பாட்டாளி வர்க்க இயக்கம் அடுத்தடுத்து செல்ல வேண்டிய இலக்குகளை, அவ்வப்போதைய அரசியல் சமூக பொருளாதார நிலைமைகளை மையமாக வைத்து பல உடனடி உத்திகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கும்.இயக்கத்தின் தேக்கம் அல்லது வளர்ச்சி, புரட்சியின் எழுச்சி அல்லது வீழ்ச்சி தருணங்களில் ஒரு குறுகிய காலத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாட்டிற்கான பாதையை தீர்மானிப்பது நடைமுறை உத்திகள். குறிப்பிட்ட சூழல் மாறிய பிறகு பழைய போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்கள், பழைய முழக்கங்கள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி,புதிய சூழலில், புதிய நடைமுறை உத்திகள் செயல்படுத்தப்படும்.
தொலைநோக்கு உத்தி, நடைமுறை உத்தி (strategy and tactics) இரண்டுமே போர்க்காலங்களில் பயன்படுத்தும் சொற்களிலிருந்து வந்தவை. தொலைநோக்கு உத்தியின் நோக்கம் ஒரு போரில் வெல்வது என்று வைத்துக் கொண்டால், நடைமுறை உத்திகள் தற்போதைய குறைந்தபட்ச இலக்குகளை நிச்சயித்து பகுதிபகுதியான வெற்றிகளை சாதிக்கும்.
உத்திகள் எனும் அறிவியல்
தொலைநோக்கு உத்தியும் தற்போதைய அரசியல் நடைமுறை உத்தியும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக அமைதல் வேண்டும். ஒவ்வொரு சமயத்திலும் மேற்கொள்ளப்படுகிற அரசியல் நடைமுறை உத்தி தொலைநோக்கு இலக்கான வர்க்க அரசை அமைப்பது என்கிற லட்சியத்தை நோக்கி மேலும் மேலும் முன்னேறுவதாக இருக்க வேண்டும்.
தொலைநோக்கு உத்தி நடைமுறை உத்தி எனப்படுவது ஒரு அறிவியல். இது யாருக்கான அறிவியல்? பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமைக்கான அறிவியல்.
ரஷ்யாவின் புரட்சி வரலாறு தொலைநோக்கு உத்தியையும், நடைமுறை உத்திகளையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு ஏராளமான பாடங்களைக் கொண்டுள்ளது.
1917 பிப்ரவரி மாதம் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடைபெற்று கெரன்ஸ்கி தலைமையில் முதலாளித்துவ ஆட்சி அரங்கேறியது. ஆனால் அடுத்த 8 மாதங்களில், 1917 -நவம்பரில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நிகழ்ந்து பாட்டாளி வர்க்க ஆட்சி அமைந்தது.
இந்த வரலாற்று நிகழ்வுகளை கணித்து 1905 -ஆம் ஆண்டே லெனின் எப்படிப்பட்ட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று எழுதினார். முதல் கட்டம், முதலாளித்துவ புரட்சியாகவும், அடுத்த கட்டம் சோசலிசப் புரட்சியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று போல்ஷிவிக் கட்சிக்கும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் அவர் அறிவுறுத்தினார்.
இதனை “சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலில் லெனின் தெளிவாக எழுதியுள்ளார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியும்,சோஷலிசப் புரட்சியும் ஒரே சங்கிலியின் இரண்டு கண்ணிகள் என்று லெனின் விவரித்தார். ரஷ்ய புரட்சியின் வேகமான முன்னேற்றத்தில் இரண்டும் ஒருங்கிணைந்த கட்டங்களாக லெனின் கணித்தார்.
புரட்சி உத்திகளின் நாயகன் லெனின்
உத்திகளை அறிவியலாக வளர்த்தெடுத்தது லெனினியம் அதில்தான் லெனினியத்தின் மகத்துவம் அடங்கியுள்ளது. முதலாளித்துவப் புரட்சியை சோசலிசப் புரட்சியாக முன்னெடுக்க செய்யும் உத்திகளைக் கொண்டதாக லெனினியம் விளங்குகிறது. லெனினியம் என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான தத்துவமாக இன்றளவும் பொருந்துவதாக அமைந்துள்ளது. வரலாற்றில் புரட்சி உத்திகளின் நாயகனாக லெனின் திகழ்கிறார்.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி, சோசலிச புரட்சி ஆகிய இரண்டு புரட்சிகளிலும் அணி திரட்ட வேண்டிய வர்க்க சக்திகளையும் லெனின் துல்லியமாக விளக்கியுள்ளார். “பாட்டாளி வர்க்கப் புரட்சியும், ஓடுகாலி காவுட்ஸ்கியும்” என்ற நூலில் லெனின் இவற்றை விளக்கினார்.
புரட்சியின் எழுச்சியான அந்த பயணத்தில், முதலில் ஒட்டுமொத்த விவசாய பிரிவினர்கள் திரண்டு, மன்னராட்சிக்கு எதிராகவும், நிலப்பரப்புத்துவ மத்தியகால கொடுங்கோன்மைக்கு எதிராகவும், அணி திரள்வார்கள். அப்போது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முன்னெடுக்கப்படுகிறது.
பிறகு, இதன் அடுத்த கட்டம் எது? ஏழை விவசாயிகள், அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தினர் மற்றும் அனைத்து சுரண்டப்பட்ட வர்க்க சக்திகளும் முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரள்வார்கள்; அது மட்டுமல்லாது, கிராமப்புற பணக்கார சக்திகள், பெரும் நில உடமையாளர்கள், இலாப வேட்டையாடும் சுயநல சக்திகள் ஆகிய அனைவருக்கும் எதிராக, அவர்கள் அணி திரள்வார்கள். இந்தக் கட்டத்தில் சோசலிசப் புரட்சி முன்னெடுக்கப்படும். இந்த இரண்டு புரட்சிகளுக்கும் இடையில் சீனப் பெருஞ்சுவர் ஏதுமில்லை என்றும், இரண்டும் தனித்தனியானது அல்ல என்றும் லெனின் விளக்கினார்.
சோசலிசத்தின் மீதான ஈர்ப்பு
நீண்ட காலமாக “சோசலிசம்” “பொதுவுடமை” என்ற முழக்கங்கள் மீது மக்களிடையே நன்மதிப்பு இருந்து வருகிறது. சோவியத் யூனியன் இருந்தபோது, அது நிகழ்த்திய சாதனைகள் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, சோவியத் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து துவங்கி, மகத்தான தொழில், விவசாய, தனிமனித வளர்ச்சியை சாதித்தனர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அவர்கள் சாதித்தனர்.இந்த சாதனைகளால் உலகம் முழுவதும் மக்கள் ஈர்க்கப்பட்டனர். பல ஐரோப்பிய, அமெரிக்க அரசாங்கங்கள், தொழிலாளர் நல நடவடிக்கைகள் மற்றும் பாப்புலிஸ்ட் என்று சொல்லப்படுகிற சலுகைகள், நிவாரணங்களை மக்களுக்கு வழங்கும் பல நடவடிக்கைகளை அமலாக்கின.
ஏராளமான அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் சோசலிசத்தின் மீது ஏற்பட்ட கவர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள், சோசலிசம் தங்களது இலட்சியம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ‘ஆவடி சோசலிசம்’ போன்ற சொற்றொடர்களை பேசினர். இந்திரா காந்தி ஒரு படி மேலே சென்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சோசலிசம் என்கிற சொல்லை கொண்டு வந்தார்.
தமிழகத்திலும் கூட பெரியார் துவக்க காலங்களில் சோசலிசம் தனது லட்சியமாக அறிவித்து, கார்ல் மார்க்சின் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை பதிப்பித்து வெளியிட்டார். அண்ணா, கருணாநிதி என பல தலைவர்கள் பொதுவுடமைதான் தங்களது இலட்சியம் என்றும், பொதுவுடைமை பூங்காவாக தமிழகத்தை மாற்றுவோம் எனவும், அவ்வப்போது நயத்துடன் பேசி வந்தனர். அதேபோன்று, மற்ற கட்சி தலைவர்களும் பல சந்தர்ப்பங்களில் சோசலிசத்தை உச்சரித்து வந்தனர். சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு இது சிறிது குறைந்தது என்றாலும் கூட, இன்னமும் முதலாளித்துவம் ஏற்படுத்தி வரும் நெருக்கடியால், அவ்வப்போது மாற்று முழக்கமாக சோசலிசம் பேசப்பட்டு வருகிறது.
இத்தகைய பேச்சு, முழக்கங்களால் சோசலிசத்தை அடைய இயலுமா? சோசலிசம் பேசுகிற சிலருக்கு ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற’ மனிதநேய சிந்தனை அடிப்படையாக இருக்கக்கூடும். பலருக்கு மக்கள் நன்மதிப்பை பெற வேண்டும் என்கிற அரசியல் நோக்கம் இருக்கலாம். உண்மையில், நல்லெண்ணங்களும், மேற்கண்ட அரசியல் நோக்கங்களும் சோசலிசத்தை சாதிக்கும் வழியாக இருந்திட முடியாது.
இதில் அறிவியல் அடிப்படையிலான சமூகப் பார்வை தேவைப்படுகிறது. அதனை மார்க்சியமே வழங்குகிறது.அறிவியல்ரீதியாக தொலைநோக்கு உத்தி வரையறுக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு, மாறுகிற நிலைமைகளுக்கு ஏற்ப, அரசியல் நடைமுறை உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது உத்திகளை உருவாக்கிக் கொள்கின்றன.
ஆனால் மற்ற கட்சிகள் வெறும் முழக்கம் என்கிற அடிப்படையில் சோசலிசம் பேசுகின்றனர். இது சோசலிச லட்சியத்தை அடைவதற்கான பாதை அல்ல. பல சந்தர்ப்பங்களில் மக்களை திசை திருப்பவும் இது பயன்படுகிறது.
உலக கம்யூனிஸ்ட் இயக்கம்: இரண்டு தவறுகள்.
உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சில கட்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வர்க்க நிலைமைகளை துல்லியமாக ஆராயாமல் சோசலிசக் குறிக்கோளை முன்னிறுத்துகின்றனர். இது தவறானது. இது சோசலிசத்தை எட்டும் வழிமுறை அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை உடனடி இலட்சியமாக முன் வைக்கவில்லை; தன் தொலைநோக்கு உத்தியாக கட்சி மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதையே அது நோக்கமாக முன்வைக்கிறது.
சில சந்தர்ப்பங்களில், சில கம்யூனிஸ்ட் கட்சிகள் தொலைநோக்கு உத்தி பற்றி அக்கறை கொள்ளாமல், உடனடி அரசியல் தேவைகளை மையமாகக் கொண்ட அரசியல் நடைமுறை உத்திகளை முன்வைத்து செயல்படுகிற தவறுகளையும் செய்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டில் ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்திற்கு செல்வதை விட, அவ்வப்போது சில நிலைப்பாடுகளை எடுத்து இயங்கிக் கொண்டிருப்பது போதுமானது என்ற நிலை எடுத்தனர்.அக்கட்சியின் அன்றைய தலைவர் பெர்ன்ஸ்டைன் குறிப்பிட்டார்: “பொதுவாக சோசலிசம் இறுதி இலக்கு என்பதல்ல; இயங்கிக் கொண்டிருப்பதுதான் அவசியம்”. இது ஒரு மோசமான திருத்தல்வாதம் என்று ரோசா லக்சம்பர்க், லெனின் உள்ளிட்டவர்கள் விமர்சித்தனர்.
ஆக, இரண்டு முனைகளில் தவறுகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
1) மாறிவரும் சூழல், வர்க்க நிலைமைகளை ஆராய்ந்து அவ்வப்போது அரசியல் நடைமுறை உத்திகள் உருவாக்காமல், வெறும் தொலைநோக்கு இலட்சியத்தை மட்டும் பேசுவது.
2) தொலைநோக்கு இலட்சியத்தைக் கைவிட்டு உடனடி நிகழ்வுகள், தேர்தல்கள் போன்றவற்றிற்காக மட்டும் அரசியல் நடைமுறை உத்திகளை உருவாக்கி உடனடி பலன்களுக்காக செயல்படுவது. குறிப்பாக, நாடாளுமன்ற இடங்கள் மற்றும் பதவிகளை குறிவைத்து செயல்படுவது.
இந்த இரண்டு தவறுகளை எதிர்த்து, இடது ,வலது, திருத்தல் வாதங்கள் என அவற்றை வரையறை செய்து, லெனின் கடுமையான, சித்தாந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளார். இந்தக் கருத்துப் போராட்டங்கள் மார்க்சியத்தின் உயிர்நாடி இலட்சியமான கம்யூனிசத்தை நோக்கிய பயணத்துக்கு உதவி செய்திடும்.
மார்க்சிஸ்ட் கட்சி உத்திகள்
இந்தியாவிற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. இங்கு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் கொண்ட வர்க்கக் கூட்டணி பெருமுதலாளிகளின் தலைமையில் அரசு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அத்துடன், அந்நிய மூலதனம் இந்தியப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிற நிலையில், அந்நிய மூலதனம் அதிகாரத்தில் பங்கு போட்டு இயங்கி வருகிறது.
சமூக தளத்தில், இனம், மொழி, பண்பாடு, மதம், சாதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்திய சமூக வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த வர்க்க,சமூக நிலைமைகளை ஆராய்ந்து, இந்திய அரசின் வர்க்கத்தன்மையை எதிர்கொள்ளும் வகையில், புரட்சிகர தொலைநோக்கு உத்தியை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கொண்டுள்ளது. இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசினை வீழ்த்துவதற்கு தொழிலாளி- வர்க்க கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயக அணி அமைப்பதை மார்க்சிஸ்ட் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது கட்சி காங்கிரஸ், தற்போதைய சூழலில் கட்சி பின்பற்ற வேண்டிய அரசியல் நடைமுறை உத்தியை விவாதித்து இறுதிப்படுத்தியது. அதன் சாராம்சம் வருமாறு:
கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு, (கட்சி காங்கிரஸ்) பாஜகவைத் தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டும் என்பதை அரசியல் நடைமுறை உத்தியாக வகுத்தது.
*மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு – இந்துத்துவ வகுப்புவாதக் கொள்கைகளை முறியடிக்க வேண்டும்;
*இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்;
*தேர்தல்கள் வரும் சூழலில், பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகரித்து ஒருமுகப்படுத்த வேண்டும்.
*இதனை மாநிலச் சூழலுக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும்.
*இந்தக் கடமைகளை மேற்கொள்வதற்கு நமது சொந்த பலம் மற்றும் இடதுசாரிகளுடைய பலம் அதிகரிக்க வேண்டும். கட்சியின் சொந்த பலமும் வெகுஜன தளமும் அரசியல் செல்வாக்கும் விரிவாக்கம் அடைய வேண்டும் என்றால், வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்சியும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் வலுவாக நடத்துவது முக்கிய தேவை. இதனால் உருவாகும் அரசியல் செல்வாக்கைக் கட்சியின் வெகுஜன தளமாக மாற்ற வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்த உத்தி அமலாக்கத்தில் இருந்து வந்துள்ளது. இது பற்றிய பரிசீலனை மதுரையில் நடைபெற உள்ள 24- வது கட்சி காங்கிரஸில் நடைபெற உள்ளது.
மக்களிடம் உரையாடல்
இன்றைய உலகில் வடதுருவ நாடுகள், தென் துருவ நாடுகள் என அத்துணைப் பகுதிகளிலும் தொழிலாளர் போராட்டங்களும், அனைத்து தரப்பட்ட மக்களின் போராட்டங்களும் வெடித்து வருகின்றன. முதலாளித்துவத்தின் மனித விரோத விளைவுகள், மக்களை போராட்டக் களத்தில் தள்ளி விடுகின்றன.
இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வர்க்கப் போராட்டங்களின் இலக்குகளை வரையறுப்பதும், மக்களுக்கும்,வர்க்கங்களுக்கும் அதனை தெளிவுபடுத்துவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை. தாங்கள் உருவாக்குகிற தொலைநோக்கு உத்தி, அரசியல் நடைமுறை உத்தி ஆகியவற்றை மக்களிடமும் மனம் திறந்த விவாதத்தை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மார்க்ஸ் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் குறிப்பிட்டது போல, கம்யூனிஸ்டுகள் தங்களுடைய திட்டங்களையும், நோக்கங்களையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே மக்கள் ஜனநாயக அணிக்கு உரிய வர்க்கங்கள் திரள வேண்டிய புரட்சிகர முக்கியத்துவத்தை, அந்த வர்க்கங்களிடமே விளக்கிட வேண்டும். அதேபோன்று, அரசியல் நடைமுறை உத்திகளின் நோக்கங்களையும் மக்களிடம் மனந்திறந்த விவாதத்தை நடத்திட வேண்டும். அகில இந்திய மாநாட்டு விவாதங்கள் இதற்கு பயனுள்ளதாகவும், செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் அமைந்திடும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
