
பட்டியல் சாதிகளில் உள்வகைப்படுத்தல் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு – விவாதங்களும், விளக்கங்களும்
பி. வி. ராகவலு
அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப்படுத்தும் பிரச்சினையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தெளிவான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அப் பிரச்சினையில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் கூறி இருக்கிறது. இந்த பெரும்பான்மைக் கருத்தை ஒரேயொரு நீதிபதி மட்டும் மறுத்துள்ளார். உள் வகைப்படுத்தலை மேற்கொள்ளும் முடிவை மாநிலங்களின் விருப்பத்திற்கு நீதிமன்றம் விட்டு விட்டது. அமர்வு முன் உள்ள வழக்கானது முதன்மையாக மாநிலங்களைப் பற்றியது என்றாலும், தீர்ப்பின் நோக்கம் ஒன்றியத்திற்கும் பொருந்துவதாகவே அமைந்திருக்கிறது. தங்கள் தீர்ப்புகளின் ஒரு பகுதியாக, ‘கிரீமி லேயர்’ பிரச்சனையையும் நான்கு நீதிபதிகள் எழுப்பி உள்ளனர். பட்டியல் இனத்தவருக்கும் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் கிரீமிலேயர் அம்சம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
உள் வகைப்படுத்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்துள்ளது. அதேவேளையில், கிரீமிலேயர் குறித்த நான்கு நீதிபதிகளின் கருத்து மீது தனது எதிர்ப்பை பதிவு செய்து அப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குறிப்பான சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு, கடந்த காலத்தில், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் பல்வேறு உட்சாதிகளை வகைப்படுத்தும் முடிவை எடுத்தன. அப்போது அந்த வகைப்படுத்தும் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்தது. ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் வழக்குகள் காரணமாக இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஆந்திரப் பிரதேச அரசின் உள் வகைப்படுத்தல் முடிவை எதிர்த்து, 2005 ஆம் ஆண்டில், போடப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வகைப்பாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து, இந்த தீர்ப்புக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் ஆகஸ்டு 1, 2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெரும் அளவிலான சர்ச்சைகள் மற்றும் வழக்குகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் இப்போதைக்கு, நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த பிரச்சனையில் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்ட அம்சங்களில் ஒரு தெளிவை பட்டியலினத்தவரை வகைப்படுத்துதல் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது வழங்கியிருக்கிறது என்று நம்பலாம்.
உள் வகைப்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வரும் சில பொருத்தமான பிரச்சனைகளை நாம் தற்போது ஆய்வு செய்யலாம்.
மாநிலங்களுக்கு அதிகாரம்
பட்டியல் சாதிகளை உள் வகைப்படுத்தும் எந்தவொரு ஏற்பாட்டையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 341வது பிரிவு அனுமதிக்கவில்லை என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு விவகாரங்களில் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை; நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு; எனவே, உள்வகைப்படுத்தல் விவகாரமும் நாடாளுமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது என்ற வாதத்தை
உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வாறு முன்வைக்கப்பட்ட எதிர்க் கருத்துக்களை நிராகரித்த நீதிமன்றம், மாநிலங்கள் விருப்பப்பட்டால் முறையான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உள் வகைப்படுத்துதலை மேற்கொள்ள அரசியல் அமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
உள் வகைப்படுத்தல் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான அதிகாரவரம்பு பற்றியது ஒரு முக்கியமான பிரச்சனை கிடையாது. உட்பிரிவு வகைப்படுத்துதலுக்கான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கா அல்லது மாநிலங்களுக்கா என்பதைவிட, அது நியாயமா, இல்லையா என்பதுதான் நடைமுறை சாத்தியமான வினாவாக நம்முன் நிற்கிறது. கொள்கையளவில், உள் வகைப்படுத்தல் நியாயமானது.
ஒரே வகையினரா?
உள் வகைப்படுத்தல் கொள்கையை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தியிருக்கிறது. ‘கணிசமான அளவிலான சமத்துவம்’ (Substantive justice) என்ற அரசியல் அமைப்பு சட்ட இலக்கை அடைய இது உதவும் என்றும் கூறியுள்ளது. பட்டியலின வகுப்பினர் ஓர்குழுத் தன்மை கொண்டவர்கள் (Homogeneous) என்றும், அதனால் அவர்களைப் பிரிக்க முடியாது என்றும் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. பட்டியல் சாதிகளின் பல்வேறு உள் சாதியினர் தீண்டாமைக்கு ஆட்படுவதில் ஒரே வகையான நிலைமையை எதிர்கொள்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் குறிப்பிடத்தக்க சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியது. இந்தப் பன்முகத்தன்மை என்ற அம்சத்தைக் கணக்கில் கொண்டு, பட்டியலின மக்களுக்குள் சமத்துவத்தை அடைவதற்கான வழியாக உள் வகைப்பாட்டை உச்சநீதிமன்றம் பார்த்தது. ‘கணிசமான சமத்துவம்’ என்பதற்கான நீதிமன்றத்தின் அழுத்தம் தீர்ப்பில் வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும்.
தரவுகள் இல்லையா?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில எதிர்க்குரல்கள் எழுந்தன. முறையான அல்லது போதுமான தரவுகள் அல்லது புள்ளிவிபரங்கள் இல்லாமல் தனது தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிவிட்டதாகச் சொன்னதும் அதில் ஒன்றாகும். இந்த வாதத்திற்கு எந்தவித அடிப்படையும் இல்லை. மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவை பொதுத்தளத்தில் கிடைக்கின்றன. பட்டியலினத்தவர்களின் உட்பிரிவுகளில் சமச்சீரற்ற அளவில் முன்னேற்றம் இருப்பதை அந்த அறிக்கைகள் வெளிப்படுத்தின. மேலும், 2011ஆம் ஆண்டு பொதுக் கணக்கெடுப்பில் உள்ள பட்டியலின உட்பிரிவுகள் தொடர்பான தரவுகள் இன்னும் பரந்த அளவில் மேற்கூறிய அறிக்கைகளோடு ஒத்துப் போகின்றன.
சிறப்பு நடவடிக்கைகள் போதுமா?
பட்டியலின உட்பிரிவுகளுக்குள் சீரற்ற வளர்ச்சி நிலைமை இருந்தாலும், அதைச் சரி செய்ய உள் வகைப்பாடு செய்வது சிறந்த வழி இல்லை என்று சிலர் வாதிடுகிறார்கள். பட்டியலினத்தவர்களுக்குள் முன்னேறிய பிரிவினரோடு போட்டியிடும் வகையில், அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தங்கள் வாதத்தில் குறிப்பிடுகின்றனர். சிறப்பு நடவடிக்கைகள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், உட்பிரிவு வகைப்படுத்துதலுக்கு அது மாற்றாக இருக்க முடியாது. சிறப்பு நடவடிக்கைகள் துணையாக இருக்குமேயொழிய, மாற்று இல்லை. இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை என்பதை நினைவில் கொள்வது முக்கியமானதாகும். உள் வகைப்படுத்தல் என்பதும் உரிமையே. பட்டியலினத்தவர்களில் பின்தங்கியவர்களுக்காக வேறு சில வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், அவை உரிமைகளாக இருக்காது. அந்தந்த அரசுகளின் கருணையின் அடிப்படையிலேயே அவை இருக்க முடியும்.
தீண்டாமை மட்டுமே அளவுகோலா?
உட்பிரிவு வகைப்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாதமானது, இடஒதுக்கீடு என்ற கோட்பாட்டை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை அளவுகோல்களுக்கே அது எதிராக நிற்கிறது என்பதாகும். இதன்படி, இடஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதில் தீண்டாமை என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட தன்மை, போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தொடர்பில்லாதவற்றை இணைப்பதால் இடஒதுக்கீடு என்ற கொள்கையே நீர்த்துப் போகிறது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆகவே உள் வகைப்படுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள். இந்த வாதத்திற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.
பட்டியலினத்தவர்களுக்குள் உள்ள வேறுபாடுகளைச் சரி செய்வதற்கான ஒரு நடவடிக்கையே உள் வகைப்பாடாகும். இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இந்த நடவடிக்கை இருக்கிறது என்று கருதுவதற்கு, எந்தவிதமான அடிப்படையும் இல்லை. இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்றுப் பின்னணி, அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகள் ஆகியவற்றோடு, தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் வராத, பிற பிரிவினருக்கான விதிகளையும் சேர்த்து ஆய்வு செய்தால், இட ஒதுக்கீடு தருவதற்கு ஒரேயொரு மற்றும் தீர்மானகரமான அளவுகோல் (Overarching) என்று எதுவும் இல்லை என்பதைப் பார்க்க முடியும். தீண்டாமைக் கொடுமையை நேரடியாக எதிர்கொள்வதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஆயுதமாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வளர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், பட்டியலினத்தவர் வாழ்நிலையை மேம்படச் செய்வதோடு, அவர்கள் சந்திக்கும் சமூக ஒடுக்குமுறைகளைச் சமாளிக்கத் தேவையான சுயவிடுதலையைப் பெறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கக் கூடியதாகவே அது அமைந்துள்ளது. அதனால்தான் அருவருப்பான தீண்டாமைக் கொடுமையை நேரடியாக எதிர்கொள்ள சிறப்பு விதிகள் அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படியில், இத்தகையக் குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு சட்டங்களை அரசு இயற்றியுள்ளன. பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில்தான் இடஒதுக்கீடு தரப்படுகிறது. அதேவேளையில், பாதிக்கப்பட்ட பிரிவினர் மத்தியிலும் அதை சமமாகப் பகிர்வதை உறுதி செய்வது முற்றிலும் நியாயமானதாகும்.
நிலுவை காலியிடங்கள் நிரப்பப்படாதா?
உட்பிரிவு வகைப்படுத்தலால் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே போய் விடும் என்றும், தொடர்ந்து அவை பொதுப் பிரிவினருக்கான பணியிடமாக மாற்றப்பட்டு விடும் என்றும் சிலர் கவலை தெரிவிக்கிறார்கள். உள்வகைப்படுத்தல் மற்றும் பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்வது ஆகிய இரண்டும் சம்பந்தமில்லாத பிரச்சனைகளாகும். அவற்றை இணைத்துப் பார்க்க ஏதுமில்லை. உள் வகைப்படுத்தலுக்கான கோரிக்கை எழும் முன்பே, பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்வது குறித்த விவாதம் நடந்து வருகிறது. நிரப்பப்படாத பணியிடங்களைப் பொதுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு எதிரான போராட்டங்களால், பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog Vacancies) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையும் மீறி, நிரப்பப்படாத பணியிடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவது இன்றும் தொடர்கிறது. அண்மையில், இவ்வாறு பொதுப் பிரிவுக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது. ஆனால் கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், அவை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன. வருங்காலத்தில் அத்தகைய முயற்சிகள் நடந்தால், அவையும் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சனையை உட்பிரிவு வகைப்படுத்தலோடு இணைப்பது சரியானதல்ல. உள்வகைப்படுத்தல் என்பது பட்டியலின சமூகத்திற்கு உள்ளேயுள்ள பிரச்சனையாகும். ஏற்கனவே இருக்கும் ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு தருவது மட்டுமேயாகும். ஒரு உட்பிரிவுக்கான ஒதுக்கீடு நிரம்பாவிட்டால், வேறு உட்பிரிவின் மூலம் அதை நிரப்பலாம். அப்படியும் நிரம்பாவிட்டால், பின்னடைவுப் பணியிடமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பட்டியலின ஒதுக்கீட்டிலிருந்து காலியிடங்களை மாற்றாமல் இருப்பதையும் இது உறுதி செய்யும். உள் வகைப்படுத்தலை மாநிலங்களும், ஒன்றிய அரசும் அறிமுகப்படுத்துகையில், சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து இடங்கள் மாற்றப்படுவதைத் தடுக்க, முறையான சட்ட நடைமுறைகளும், அரசியல் அமைப்பு சட்ட நெறிகளும் உறுதி செய்யப்படுகிற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தலித் ஒற்றுமைக்கு எதிரானதா?
தலித் ஒற்றுமையை உள்வகைப்படுத்துதல் சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் சில வட்டாரங்களில் வெளிப்படுகிறது. உள் வகைப்படுத்தல் என்ற கோரிக்கை, பிளவை ஏற்படுத்துவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். அதிகரித்து வரும் சமமற்ற நிலை, பலன்களை விநியோகிப்பதில் உட்பிரிவினர் எதிர்கொள்ளும் சமச்சீரற்ற நிலை மற்றும் இவற்றால் ஏற்படும் அதிருப்தி, ஆகியவையே பிளவை உண்டாக்குகின்றன. வகைப்படுத்தலுக்கான கோரிக்கையும் அதில் இருந்தே எழுகிறது. இதனால், உள் வகைப்படுத்தலை எதிர்ப்பதால் ஒற்றுமை ஏற்படாது. சொல்லப்போனால், அதற்கு மாறான விளைவையே அத்தகைய எதிர்ப்பு உருவாக்கும். உள் வகைப்படுத்தலே ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது உண்மையாகும். பட்டியலினத்தவர்களில் ஓரளவு வளர்ந்துள்ள பிரிவினர், உள் வகைப்படுத்தலை ஆதரிக்க முன்வருவதால், சமூகங்களுக்கு இடையிலான உராய்வு மட்டுப்படும். அதோடு, பட்டியல் சாதி மக்களுக்குள் வேற்றுமையை விதைக்கும் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் முடியும்.
வாக்கு வங்கி அரசியல் நடவடிக்கையா?
உள் வகைப்படுத்தலுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு வாதம் என்னவென்றால், அது முதலாளித்துவக் கட்சிகளின் கைகளில் ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்பதே. அதைத் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, மோதல்களைத் தூண்டுவது ஆகியவற்றில் முதலாளித்துவக் கட்சிகள் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது உண்மைதான். குறிப்பாக, பாஜக இதில் திறமை பெற்றிருக்கிறது. இருந்தாலும், உள் வகைப்படுத்தலை நிராகரிக்க இதையொரு சாக்காகச் சொல்ல இயலாது. பல்வேறு உட்பிரிவுகளுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற வளர்ச்சியை அங்கீகரிப்பது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் முதலாளித்துவ தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும். உண்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தவிர்ப்பதால் அல்ல.
முழுமையான தீர்வா?
உள் வகைப்படுத்தலுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒப்புதலால், பட்டியலின மக்களில் குறைவாகப் பலனடைந்த உட்பிரிவினரின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று யாராவது நம்பினால், அவர்கள் ஏமாந்துதான் போய்விடுவார்கள். மேலும் நவீன-தாராளமயக் கொள்கைகள் வந்துவிட்டதாலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும் அத்தகைய பொருளாதாரப் பாதை நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இடஒதுக்கீடு என்பது மேலும் நீர்த்துப் போய், அது பெயர் அளவிலானதாக மாறி வருகிறது. இந்த சூழலில், உள் வகைப்படுத்துதல் பெரிய தாக்கத்தை எற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. மிகவும் குறைவான இடங்களை பட்டியலினப் பிரிவினருக்குள் பகிர்ந்து கொள்ள உதவலாம். அதையும் தாண்டி, பட்டியலின மக்களுக்குள் கூடுதலான ஒற்றுமையை ஏற்படுத்த உள் வகைப்படுத்தல் உதவும் என்பதே பெரும் பலனாக இருக்கும்.
எது உண்மையான தீர்வு?
பட்டியலின மக்களைப் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் சென்ற அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்தான் உண்மையான தீர்வு உள்ளது. நில உறவுகள் என்பது சமூகத்தின் அடித்தட்டுகளுக்குள்தான் தலித்துகளை அடைத்து வைத்திருக்கிறது. இந்த நில உறவுகள் உடைத்தெறியப்பட்டு, நில விநியோகம் நடப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தரமான கல்வி, உடல்நலன், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவை உரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு விரிவடைய வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும்போதுதான், தலித்துகளும் மற்றும் பிற பின்தங்கிய பிரிவினரும், தங்களின் பிற்பட்ட நிலையைக் கடந்து இடஒதுக்கீடுகளின் பயன் வரம்பையும் கடந்து முன்னேற முடியும்.
கிரீமிலேயர் பொருத்தமற்றது
உள் வகைப்படுத்தல் பற்றிப் பேசும்போது, அமர்வில் இருந்த ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் ‘கிரீமிலேயர்’ பிரச்சனை குறித்தும் கருத்து தெரிவித்தனர். பட்டியலின மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கும் கிரீமிலேயர் என்பதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனித்தனியாகவும் தங்கள் கருத்தை முன்வைத்தார்கள். தீர்ப்பின் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பகுதியாக இது இல்லையென்றாலும், சூடான விவாதத்தை அக்கருத்துக்கள் கிளப்பியிருக்கின்றன. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களிடையில் கிரீமி லேயர் என்பதைப் புகுத்தும் ஆலோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏனென்றால், இது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். வரலாற்று ரீதியாகவே சொத்தில்லா சமூகத்தினராக பட்டியலின மக்கள் இருந்து வருகிறார்கள். இன்றைக்குக்கூட அந்த நிலைதான் உள்ளது. சொத்துடைமை சமூகம் என்று பட்டியலினத்தவர்களுக்குள் எந்தப்பிரிவும் இதுவரையில் உருவாகவில்லை. சில அரசியல்வாதிகள், சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அல்லது சில தொழிலதிபர்கள் ஆகியோரைச் சுட்டிக் காட்டி கிரீமிலேயரை அறிமுகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்த முயற்சிப்பது பொருத்தமற்றதாகும். ஒரு வாதத்திற்காக, பட்டியலினக் குடும்பங்களில் சில குடும்பங்கள் செல்வம் மற்றும் சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்றும், அவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது என்றும் ஏற்றுக் கொண்டால்கூட, அந்தச் செல்வமும், சமூக அந்தஸ்தும் பாதுகாப்பான அல்லது மீண்டும் பின்னுக்குத் தள்ள முடியாத நிலையை எட்டிவிட்டன என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தானாகவே அத்தகைய வளர்ச்சி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. இந்த சூழலில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிரீமி லேயர் என்ற பிரச்சனையை எழுப்புவது பொருத்தமற்றதாகும்.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: கணேஷ்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
