மக்கள் ஜனநாயகத்தை, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்
பிரகாஷ் காரத்
கட்சியின் அரசியல் பணிகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கிற அரசியல்-நடைமுறை உத்தியை உருவாக்குவது, கட்சிக் காங்கிரசின் முக்கியமான பணியாகும். இதற்கு, இன்று நிலவுகிற அரசியல் நிலைமை, அரசு மற்றும் ஆளும் கட்சியின் வர்க்க இயல்பு மற்றும் தற்போதுள்ள வர்க்க சக்திகளின் சம நிலை ஆகியவற்றின் சாராம்சத்தை துல்லியமாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பயிற்சி சில நேரங்களில் சிக்கலான ஒன்றாக இருக்கலாம். ஆனால், தற்போதைய தருணத்தில், இது ஒப்பீட்டளவில் எளிமையானதாகும்.
மூன்று கேள்விகள்
மூன்று கேள்விகளை மட்டும் கேளுங்கள்-
• டொனால்டு டிரம்பின் நண்பன் என யார் தன்னைக் கூறிக் கொள்கிறார்?
• கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்?
• ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முழுமையான விசுவாசத்தோடு இருப்பவர் யார்?
– நரேந்திர மோடி மற்றும் பாஜக என்பதே இந்த மூன்று கேள்விகளுக்குமான விடையாகும்.
இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டு
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இந்துத்துவா – கார்ப்பரேட் இணைப்பையே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பாஜக – ஆர்எஸ்எஸ்சும், அதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிற இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டும் எதிர்க்கப்படுவதோடு, தோற்கடிக்கப்பட வேண்டும். இத்தகைய எளிதானதொரு முடிவுக்கு வருவதிலிருந்து, பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டை தனிமைப்படுத்தி, வலது சாரி திருப்பத்தை மாற்றியமைக்க எவ்வாறு இந்த கூட்டை எதிர்ப்பது என்பதில் மிக சிக்கலானதொரு கேள்வி எழுகிறது.
இந்துத்துவா சக்திகள் இன்று செயல்படுத்திடும் அரசியல் ஆதிக்கம் என்பது தேர்தல் வழிமுறைகளால் மட்டுமே அல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் என்ற வகையில் நாம் அறிவோம். தத்துவார்த்த, கலாச்சார மற்றும் சமூகத் தளங்களில் இந்துத்துவா சக்திகள் செலுத்தும் செல்வாக்கின் மூலமே இத்தகைய ஆதிக்கத்தை அவர்களால் செலுத்த முடிந்தது. ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றின் மீதான சர்வாதிகார தாக்குதல்கள் மூலம் செலுத்தப்படும் ஆதிக்கம் ஆகும்.
பன்முக போராட்ட இயக்கம் அவசியம்
இந்த காங்கிரசில் (அகில இந்திய மாநாட்டில்) நாம் நிறைவேற்றுகிற அரசியல் -நடைமுறை உத்தி, பாஜக – ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்துகிற பன்முகப் போராட்ட இயக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நவீன தாராளவாத கொள்கைகளின் தாக்குதல்களுக்கு எதிராகவும் கட்சியும் இடதுசாரிகளும் பல போராட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இப்போராட்டங்களில் திரட்டப்பட்ட வெகுமக்களிடையே திரிபுவாத, பிரிவினைவாத, இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டால்தான் அவர்கள் அரசியல்படுத்தப்படுவார்கள். இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைப்பதே தேவையாகும். பாஜகவிற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்துபட்ட அளவில் அணி திரட்ட நாம் பாடுபடுகிற இத்தருணத்தில், நவீன தாராளவாத கொள்கைகள் மீதான நமது சமரசமற்ற நிலைபாட்டின் காரணமாக, இந்துத்துவா மற்றும் பெரும்பான்மை வகுப்புவாதத்தின் துல்லியமான அனைத்து வெளிப்பாடுகளையும், உறுதியாகவும், சமரசமின்றியும் எதிர்க்கிற நிலையான சக்தியாக இடதுசாரிகள் மட்டுமே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாசிச நிகழ்ச்சி நிரல்
மோடி அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், ஆர்எஸ்எஸ்சின் கட்டளைப்படி இந்துத்துவா நிகழ்ச்சி நிரல், தீவிரமான நவீன தாராளவாதக் கொள்கைகள் மற்றும் எதேச்சதிகார போக்கை வலுப்படுத்துவது ஆகியனவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. இத்தகைய செயல்பாட்டில், அது நவ-பாசிச பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்-சின் பாசிச நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது என்பது இஸ்லாமிய சிறுபான்மையினரை தொடர்ந்து குறிவைப்பதை உள்ளடக்கியுள்ளது. இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறைகளாலும், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அரசு இயந்திரம் இத்தகைய வகுப்புவாத வன்முறைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் இருந்து நடத்துகிற தாக்குதல்களுக்கு இவர்கள் ஆளாகிறார்கள். இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக தொடுக்கப்படும் வன்முறை, மிரட்டல் ஆகியன, நிரந்தரமானதொரு வகுப்புவாத பிரிவினையை உருவாக்குவதற்கும், ‘பான் – இந்துத்துவா’ ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்குமான நடவடிக்கையின் பகுதியே ஆகும்.
அதிகரித்து வரும் அசமத்துவம்
கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கான வழக்குச் சொல்லாக பாஜக அரசு ஆகிவிட்டது. புதிய துறைகளை தனியார்மயமாக்க அது முயல்கிறது. மேலும், பெரும் ஏகபோகங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்கச் செய்திட புதிய துறைகளை தூக்கிக் கொடுக்கிறது. இதன் விளைவாக, மக்கள் தொகையில் 1 சதவிகிதத்தினராக உள்ள பெருஞ்செல்வந்தர்கள் நாட்டின் மொத்தச் சொத்துக்களில் 40 சதவிகிதத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். முன்னெப்போதும் இருந்திராத இத்தகைய அசமத்துவத்தை நாம் பார்க்கிறோம். வேலையில்லாத் திண்டாட்டம் – குறிப்பாக இளைஞர்களிடையே – அதிக அளவில் காணப்படுகிறது. காண்டிராக்ட் மயமாக்கல் மற்றும் தொழிற்துறையில் உருவாக்கப்படும் நிகர மதிப்பில் கூலியின் பங்கு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரித்துள்ளது. மோசமாகி வரும் விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நிலை சீரழிந்து வருகிறது.
அரசியல் திசைவழியை காட்டுவோம்
எதிர்வரும் நாட்களில் உழைக்கும் மக்களின் வர்க்க மற்றும் வெகுஜன போராட்ட இயக்கங்கள் தீவிரமடைவதைக் காண்போம். இத்தகைய போராட்ட இயக்கங்களுக்கு ஒரு அரசியல் திசைவழியை அளித்திட நாம் தயாராக இருக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்குகிற 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துகிற நடவடிக்கையில் அரசு தீவிரமாகச் செல்கிறது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக உள்ள இந்த சட்டத் தொகுப்புகள் எதிர்க்கப்பட வேண்டும். இந்த 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மே 20 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றியாக்கிட இடதுசாரிக் கட்சிகளும், அனைத்து வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளும் பாடுபடும்.
மாநில உரிமைகள் மீதான தாக்குதல்கள்
மக்களவையில் பாஜக தனது பெரும்பான்மையை இழந்திருப்பதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதிருப்பதும், இந்திய அரசையும், அரசியல் சாசனத்தையும மாற்றியமைப்பதற்கான மோடி அரசின் எதேச்சாதிகார முயற்சிகளை தடுத்து நிறுத்திடவில்லை. மக்களவைக்கும், சட்ட மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசியல் சாசன திருத்த மசோதாவைக் கொண்டு வருவது என்பது கூட்டாட்சிக் கோட்பாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். நாடாளுமன்றத்தை முடக்குவது, நீதித்துறையை பலவீனப்படுத்துவது, தேர்தல் ஆணையத்தின் சுயேச்சையான நிலையில் அரிப்பை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.
கொடூரமான ஒடுக்குமுறை சட்டங்கள்
‘உபா’ (UAPA) மற்றும் பிஎம்எல்ஏ (PMLA) போன்ற கொடூரமான சட்டங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, ஊழல் குற்றச்சாட்டு என்ற பெயரில் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எதேச்சதிகார மயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் கூட்டாட்சிக் கொள்கையையும், மாநிலங்களின் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுகிறது.
நயவஞ்சக ஊடுருவல்
இந்தியாவில் சமூக உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்பாக சாதிய நடைமுறையை நீடிக்கச் செய்ய, உப-சாதி அடையாளங்களை பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணி கையாள்கிறது. சமூக மற்றும் கலாச்சாரத் தளங்களில் மனுநீதிக் கொள்கைகள் நயவஞ்சமாக ஊடுருவி வருகின்றன. பெண்கள், தலித்துக்கள் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகள் மீது தாக்குதல்களைத் தொடுக்கும் மனுநீதி – ஆணாதிக்க நடைமுறைக்கு எதிரான போராட்டங்கள், இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த பலத்தை எவ்வாறு அதிகரிப்பது என்ற முக்கியமான பிரச்சனையை கட்சிக் காங்கிரஸ் விவாதிக்கும். வர்க்க, வெகுமக்கள் பிரச்சனைகளில் உள்ளூர் மட்டத்தில் போராட்டங்களை நடத்திட, உள்ளூர் மட்டத்தில் கட்சியைக் கட்டவும், கட்சி அமைப்பின் ஸ்தாபன செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் திட்டமிட்ட முயற்சிகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இடது ஜனநாயக முன்னணி அரசின் போராட்டம்
ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்பதில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னிற்கிறது. மாற்றுக் கொள்கைகளை இடது ஜனநாயக அரசு செயல்படுத்த முயல்வதன் காரணமாக, ஒன்றிய அரசின் விரோதத்தையும், பாகுபாட்டையும் அது எதிர்கொண்டு வருகிறது. கூட்டாட்சிக் கோட்பாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க இடது ஜனநாயக முன்னணி மற்றும் கேரள மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கவும், எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும், அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் முக்கியமான பகுதியாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில் ஒரு புதிய பகுதிக்கான அறிகுறிகளை டிரம்ப் ஜனாதிபதியாக உள்ள பதவிக் காலம் வெளிப்படுத்துகிறது. இங்கே ஏகாதிபத்திய பெருமிதம் மிகவும் அப்பட்டமாக உள்ளது. பிராந்திய இணைப்பும், நெருங்கிய கூட்டாளிகளின் வளங்களைக் கூட ஆக்கிரமிப்பதும் வழக்கமாக உள்ளது. காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை துடைத்தெறிகிற இஸ்ரேல் ஜனாதிபதி நேதன்யாகுவின் திட்டத்தை அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஆதரிக்கிறார். உலகின் வளர்ந்து வரும் பல நாடுகளுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இவையெல்லாம் இருந்த போதும் கூட, டிரம்ப்-பிற்கு அடிபணிந்து அவருக்கு விசுவாசமாக பிரதமர் மோடி இருக்கிறார்.
இறையாண்மை சமரசத்திற்கு எதிரான போராட்டம்
நம் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கப் போகின்றன. வரி விதிப்பு, எரிசக்தி, ராணுவத் தளவாடங்களை வாங்குவது போன்ற விஷயங்களில் மோடி அரசு ஏற்கெனவே இந்தியாவின் நலன்களைக் காவு கொடுத்து வருகிறது. மோடி அரசு மற்றும் அதன் நெருக்கமான கூட்டாளியான அமெரிக்காவுக்கு எதிராக புதிய பகுதி தோன்றி வருகிறது. இந்தியாவின் இறையாண்மையைச் சமரசம் செய்யும் எத்தகைய நடவடிக்கையையும் எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் முன்னணியில் இருப்பார்கள். ஏகாதிபத்திய சூறையாடல்களுக்கும், பாஜக ஆட்சியாளர்களின் அடிமைத்தனமான மனப்பான்மைக்கும் எதிராக நாம் பொங்கி எழுந்து மக்களைத் தட்டி எழுப்ப வேண்டும். பொருளாதார, வர்த்தகப் போர், உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளில் அரசியல் மற்றும் ராணுவத் தலையீடுகள் வாயிலாக டிரம்பின் கீழ் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய தாக்குதல்களை துவக்கிடும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுப்பதிலும், மோடி அரசின் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தீவிரமாக ஈடுபடுவதற்கான தருணம் இதுவாகும். மோடியின் நம்பிக்கை துரோகம் இஸ்ரேலின் கொடூரமான சியோனிச ஆட்சியால் கடந்த 17 மாதங்களாக தொடுக்கப்பட்டு வரும் இனப்படுகொலையை எதிர்கொண்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு நமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாலஸ்தீன மக்களின் நலனுக்கு, வெட்கம்கெட்ட வகையில் மோடி அரசு இழைத்த நம்பிக்கை துரோகத்தையும், இஸ்ரேலுக்கான கண்மூடித்தனமான அதன் ஆதரவையும் நாம் கண்டிக்கின்றோம்.
கியூபாவுக்கு துணை நிற்போம்
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகளை தீரத்துடன் எதிர்த்து வரும் வீரமிக்க கியூப மக்களுக்கும், கியூப அரசுக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கிறோம். சோசலிச கியூபாவுடன் நாம் என்றென்றும் துணை நிற்போம். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி, இடதுசாரி அரசியல் தலையீட்டை விரிவுபடுத்துவதற்கான தருணம் இதுவாகும். நவீன தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராகவும், உழைப்பாளி மக்களின் நலன்களை உறுதியாக பாதுகாப்பதிலும் நிலையாக இருப்பது இடதுசாரிகள் மட்டுமேயாகும். இந்துத்துவா – நவ பாசிசத்தை எதிர்ப்பதற்கான தத்துவார்த்த கொள்கையையும், உறுதிப்பாட்டையும் இடதுசாரிகள் மட்டுமே கொண்டுள்ளனர். நமது நாட்டிலுள்ள ஏகாதிபத்திய திட்டங்களுக்கு எதிரான போராட்ட இயக்கங்களை இடதுசாரிகள் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல இயலும். இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றைக் கட்டமைக்கும் பணியில் முன்செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து இடதுசாரி சக்திகளோடு இணைந்து செயல்படும்.
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் கரம் கோர்ப்போம்
பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட, பரந்த ஒற்றுமையை உருவாக்கிட அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளோடு கரம் கோர்ப்பதற்கான உறுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பித்திடும். இருண்ட சக்திகளை பின்னுக்குத் தள்ள அனைத்து இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும். மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு எண்ணங்களுடனான ‘புதிய இந்தியா’வை கட்டமைத்திட, நாம் கூட்டாகச் செயல்படுவோம். மக்கள் ஜனநாயகத்தை நோக்கி, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
