
வரலாறு: ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% மகளிர் இட ஒதுக்கீடு’ !
பிருந்தா காரத்
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை மீண்டும் ஒருமுறை மையமான விவாதப் பொருளாக ஆகியுள்ளது. இந்த முடிவுக்கு மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கும் காரணத்தாலேயே இந்த விவாதங்கள் எழுகின்றன. எனவே, நாம் இந்தக் கட்டுரையில் மகளிர் இட ஒதுக்கீட்டோடு தொடர்புடைய முக்கியப் பிரச்சனைகள், சட்டமியற்றும் மன்றங்களில் இதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், இப்போது முன்னெடுக்கப்படும் அரசியல் மோதல்கள் ஆகியவற்றை ஆராய்வோம்.
பெண்களின் பிரச்சனையா?
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் வெறும் ‘பெண்கள் தொடர்பான பிரச்சினை’ என்று கருதியதில்லை. மாறாக, அதை, நிலவும் அதிகார அமைப்புகளுக்கு சவால் விடுப்பதற்கும், ஜனநாயகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும் நெருக்கமாகப் பிணைந்துள்ள ஒரு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனையாகவே பார்த்து வருகிறது.
இன்றைய இந்தியாவில், கார்ப்பரேட் ஆதிக்கம், மதவாத அரசியல் மற்றும் தேர்தல் நெறிமுறைகளைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களின் சீரழிவு ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்ற ஜனநாயகமே பலமுனைகளில் அபாயத்தை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில், மகளிர் இடஒதுக்கீடு என்ற பிரச்சினை, அதனுடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஒரு தனியான அரசியல் செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்கான கருவியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தை அதன் அனைத்து பரிமாணங்களுடனும் முழுமையாகப் புரிந்துகொள்வது மிகுந்த அவசியமாகிறது.
ஆணாதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகம்
அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 15ஆம் பிரிவுகள், சமத்துவத்திற்கான உரிமையையும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. இந்த அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்கள், பெண்கள் பல தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேற உதவியுள்ளன. எனினும், அரசியல் துறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்புகளிலும் ஆண்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளனர். இதற்குக் காரணம், பெண்களிடம் தகுதியோ திறமையோ குறைவாக இருப்பதல்ல; மாறாக, அவர்களுக்கு எதிராகச் செயல்படும் நடைமுறை மற்றும் அமைப்புரீதியான பாகுபாடுகளே ஆகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆண்களுடன் தோளோடு தோள் நின்று பெண்களும் அதே வீரத்துடனும் உறுதியுடனும் போராடினர். விடுதலை பெற்ற இந்தியா, பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான வாக்குரிமையை வழங்கிய ஆசியாவின் முன்னோடி நாடுகளில் ஒன்றாகும்.
இருப்பினும், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெறும் 22 பெண்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1952 முதல் 2026 வரை நடைபெற்ற பதினெட்டு பொதுத் தேர்தல்களுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 74 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, 74 ஆண்டுகளில் மொத்தம் 52 உறுப்பினர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர்; ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக மூன்று பேருக்கும் குறைவான உயர்வே ஏற்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மூன்றில் ஒரு பங்கு (33%) என்ற இலக்கை அடைய இன்னும் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆகும்.
சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (Inter-Parliamentary Union) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாடாளுமன்றத்தில் சுமார் 13 சதவீதம் பெண்கள் மட்டுமே உள்ள 183 நாடுகளில் இந்தியா 150வது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான நேபாளம் 34 சதவீதத்திற்கும் அதிகமான பெண் உறுப்பினர்களுடன் 50வது இடத்திலும், பாகிஸ்தான் 21 சதவீதத்திற்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்துடன் 112வது இடத்திலும் உள்ளது.
பெண் வேட்பாளர்களை போதுமான அளவில் தேர்வு செய்து தேர்தலில் நிறுத்தத் தவறியதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனினும், குறிப்பாக இந்துத்துவச் சித்தாந்தத்தில் வேரூன்றிய சில அமைப்புகளும், அரசியல் சக்திகளும், பெண்கள் பொதுவாழ்க்கையில் முழுமையாக பங்கேற்பதை வெளிப்படையாகவே எதிர்த்துள்ளன.
2013ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட கருத்து இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். திருமணம் என்பது ஒரு “ஒப்பந்தம்”; அதன்படி மனைவி வீட்டுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்; கணவன் குடும்பத்திற்குத் தேவையானவற்றை வழங்க வேண்டும் என்ற அவரது கருத்து, பெண்களின் சமூகப் பங்கு குறித்த இந்தக் கண்ணோட்டத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இன்று ஆர்.எஸ்.எஸ். பெண்களின் பொதுவாழ்வுப் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போலத் தோன்றினாலும், அது பெரும்பாலும் உதட்டளவிலான ஆதரவாகவே உள்ளது. பெண்களின் பொதுப் பங்கேற்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் அதன் தற்போதைய நிலைப்பாட்டுக்கும், அதன் அடிப்படைச் சித்தாந்தப் பார்வைக்கும் இடையிலான முரண்பாடு இன்னும் நீடிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடஒதுக்கீட்டை உறுதிசெய்த 73 மற்றும் 74ஆவது அரசியலமைப்புத் திருத்தங்கள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க பலன்களை உருவாக்கியுள்ளன.
இடதுசாரிகளின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீர்திருத்தங்களும், கேரளத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் திட்டமிடல் (People’s Planning) செயல்முறையும் போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் உருவாக்கிய சமூக-அரசியல் சூழலில், அடிமட்ட ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பு மேலும் வலுப்பெற்றது.
இன்று, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் 14.5 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பணியாற்றுகின்றனர். 21 மாநிலங்கள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளன.
அடிமட்ட அரசியல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பைப் பொறுத்தவரை, உலகிலேயே சிறந்த சாதனைகளில் ஒன்றை இந்தியா படைத்துள்ளது. ஆனால் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்கள் போதிய அளவில் இடம்பெறாமல் தடுக்கப்பட்டிருப்பது, ஆணாதிக்கத்தின் ஆழமான மற்றும் தீவிரமான ஆதிக்கமே இன்னமும் நிலவி வருவதைக் காட்டுகிறது.
சுருக்கமான வரலாறு: நம்பிக்கையும் ஏமாற்றமும்
1975 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற பெண்களின் நிலை குறித்த அறிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் நிலவும் குறைவான பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியது.
பெண்களின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அக்குழுவின் செயலாளரான டாக்டர் வீணா மஜும்தார், அந்தக் குழு உறுப்பினரான பேராசிரியர் லோட்டிகா சர்க்கார் ஆகியோர் சமர்ப்பித்த கருத்து வேறுபாட்டுக் குறிப்பில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரே பயனுள்ள வழி, இடஒதுக்கீட்டை அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்குவதே என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) உள்ளிட்ட பல மகளிர் அமைப்புகள் முன்னெடுத்தன. 1988 ஆம் ஆண்டின் தேசிய தொலைநோக்குத் திட்டம் (National Perspective Plan), உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரைகளின் விளைவாக, 73 மற்றும் 74ஆவது அரசியலமைப்புத் திருத்தங்கள் 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் இதேபோன்ற இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் முயற்சியை முன்னெடுக்கவில்லை.
இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம்தான், தனது குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இடம்பெற்றிருந்த பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முன்வந்தது. அதன் அடிப்படையில், 1996 செப்டம்பர் 12 அன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், பாஜக உடனடியாக அந்த முயற்சியைத் தடுத்தது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உமா பாரதி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு ‘உள் இடஒதுக்கீடு’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனால் ஏற்பட்ட அமளி, பின்னரும் பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்தது.
இந்த மசோதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கீதா முகர்ஜி தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. 1996 டிசம்பரில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த தேர்வுக்குழு, “உரிய நேரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்; அதன் மூலம் OBC சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவார்கள்” என்று பரிந்துரைத்தது.
பட்டியல் சாதியினர். பழங்குடியின மக்களுக்கு நடைமுறையில் உள்ளதுபோல, முதலில் செங்குத்து (vertical) இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அதன் பின்னர் கிடைமட்ட (horizontal) இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் இந்தக் கொள்கை, மகளிர் அமைப்புகளாலும் இடதுசாரி இயக்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், தேவகவுடா அரசும், அதைத் தொடர்ந்து அமைந்த குஜ்ரால் அரசும் கவிழ்ந்தன. அதனுடன் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவும் காலாவதியானது.
1998 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த பாஜக அரசுகள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் முன்வைத்தன. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான உண்மையான அரசியல் விருப்பத்தை அவை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. அப்போதைய ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜன், மசோதா நிறைவேறுவதற்கான முன்நிபந்தனைகளாக “ஒருமித்த கருத்து” (consensus) மற்றும் “சபை ஒழுங்காக இருக்க வேண்டும்” (House must be in order) என்ற இரண்டு புதிய சொற்றொடர்களை நாடாளுமன்ற அரசியலில் அறிமுகப்படுத்தினார்.
2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையினுள் மசோதாவை நிறைவேற்றக் கோரி குரல் எழுப்பினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பிரேம்ஜாம், “ஒருமித்த கருத்து இல்லாதது மாநில மறுசீரமைப்பு மசோதாக்கள் உட்பட பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை” என்பதைச் சரியாகச் சுட்டிக்காட்டினார். “சபை ஒழுங்காக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை, அரசின் மறைமுக ஆதரவுடன் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து அமளி ஏற்படுத்துவதற்கான அனுமதிச் சீட்டாகவே செயல்பட்டது.
இடதுசாரிகளின் தொடர்ச்சியான அழுத்தமும், காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் நேர்மறையான பங்களிப்பும் காரணமாக, 2008ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அது நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, இறுதியில் 2010 மார்ச் மாதத்தில் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி (BSP), OBC பெண்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரி வெளிநடப்பு செய்தது. சமாஜ்வாதி கட்சியும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (RJD) மசோதாவை எதிர்த்தன; திரிணாமூல் காங்கிரஸ் கட்சி (TMC) வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நின்றது.
இரண்டு நாட்கள் நீடித்த கடும் அமளி மற்றும் இடையூறுகளுக்குப் பிறகு, மாநிலங்களவைத் தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த ஏழு உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், அப்போது செயல்பாட்டிலிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக இருந்த நிலையில், மசோதா 186 வாக்குகள் ஆதரவுடனும், ஒரே ஒரு எதிர்ப்பு வாக்குடனும் நிறைவேற்றப்பட்டது.
மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்கு முன்பாக நிலவிய பதற்றமான நாட்களின் விவரங்களை, அவற்றை நேரில் கண்ட சாட்சியாக நான் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிரலாம். ஆனால் மாநிலங்களவையிலிருந்து மக்களவைக்கு வெறும் ஐந்து நிமிட நடைதூரம்தான் இருந்தது. இருந்தபோதிலும், அந்தப் பயணத்தை இந்த மசோதா ஒருபோதும் நிறைவு செய்யவில்லை. மக்களவையில் மசோதா குறித்து விவாதிக்கப்படுவதையும், அது நிறைவேற்றப்படுவதையும் தடுக்க, பாஜக மீண்டும் அதே “சபை ஒழுங்காக இல்லை” என்ற காரணத்தையே முன்வைத்தது.
மோடி அரசும் மகளிர் இடஒதுக்கீடும்
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் 2014 – 2019 வரையிலான காலகட்டத்தில், இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிற எதிர்க்கட்சிகளும் பலமுறை வலியுறுத்தியபோதிலும், அந்த மசோதா ஒருமுறைகூட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. 2019ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 353 இடங்களை வென்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு நெருக்கமான பலத்தைப் பெற்ற பின்னரும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இறுதியாக, 2024ஆம் ஆண்டில்தான், தேர்தலை முன்னிட்டு அதிகரித்து வந்த விமர்சனங்களைத் தணிக்கும் நோக்கில், 2023 செப்டம்பரில் 106ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவான நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam – NSVA) அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இது 2010ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிலிருந்து முக்கியமான அம்சங்களில் வேறுபட்டிருந்தது. குறிப்பாக, 334A என்ற புதிய பிரிவின் மூலம், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை (delimitation) நடவடிக்கையும் முடிவடைந்த பிறகே நடைமுறைக்கு வரும் என்ற வகையில் இணைக்கப்பட்டது.
இதனால், மகளிருக்கான இட ஒதுக்கீடு 2024 மக்களவைத் தேர்தலிலும் நடைமுறைக்கு வராது, அதற்குப் பின்னரும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தாமதப்படுத்தப்படும் என்ற கவலையை கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிப்படுத்தின. 2024 தேர்தலுக்குப் பிறகு விரைவில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும் என்றும், 2029 தேர்தலுக்கு முன்பாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவு செய்யப்படும் என்றும் அரசு உறுதியளித்தது. வேறு வழியின்றி, இந்தக் குறைபாடுகள் நிறைந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரித்தன. இதன் விளைவாக, மசோதா ஏறத்தாழ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசாங்கம் அளித்த இரண்டு உறுதிமொழிகளும் பின்னர் நிறைவேற்றப்படவில்லை.
அதற்கு பின், 2026 ஏப்ரல் மாதத்தில், தவறவிடப்பட்ட காலக்கெடு பற்றிய எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், அரசு 131ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. இம்முறை, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2011ஆம் ஆண்டின் பழைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்ததோடு, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 543 இலிருந்து 850 ஆக உயர்த்தவும், அவற்றில் 283 இடங்களை பெண்களுக்காக ஒதுக்கவும் முன்மொழிவைச் செய்தது.
இந்த நடவடிக்கை ஒரே நேரத்தில் மூன்று அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்வதாக அமைந்தது. முதலாவதாக, காலாவதியான 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொகுதி மறுவரையறையைத் தவிர்க்க முயன்றது. இரண்டாவதாக, நாடு முழுவதும் வலுவடைந்து வந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையின் அழுத்தத்தைத் திசைதிருப்பியது. மூன்றாவதாக, தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையாலும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சிறிய மாநிலங்களை, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஒரு விரிவான அரசியல் தொகுப்பின் பகுதியாக மட்டுமே ஏற்கும் நிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் ஏற்றுக்கொள்ள முடியாதது?
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய வரலாற்றில், நான்குமுறை இதுவரை நடைபெற்றுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளும், அதற்கு முன் எடுக்கப்பட்ட அண்மைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட்டியலினச் சாதி (SC) மற்றும் பட்டியலினப் பழங்குடியின (ST) இடஒதுக்கீட்டு தொகுதிகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் அவர்களுடைய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், பட்டியலினச் சாதியினருக்காக 79 இடங்களும், பட்டியலினப் பழங்குடியினருக்காக 41 இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொகுதி மறுவரையறையையும் அடுத்து, இந்த எண்ணிக்கைகள் முறையே 84 மற்றும் 47 ஆக உயர்த்தப்பட்டன. அப்போது SC/ST மக்களின் மொத்த விகிதம் 24.4 சதவீதமாக இருந்தது.
2001 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், பட்டியலினச் சாதி மற்றும் பட்டியலினப் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை உட்பட மொத்த மக்கள்தொகையும் கணிசமாக உயர்ந்திருப்பது உறுதி. எனவே, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை, இந்த சமூகங்கள் பெற வேண்டிய கூடுதல் பிரதிநிதித்துவத்தை மறுப்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டுக்குள் பட்டியலினச் சாதி மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கையையும் அது நேரடியாகக் குறைத்துவிடும். இது பெண்களின் உரிமைகள் என்ற பெயரில், மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்படும் மனுவாத அநீதியே ஆகும்.
131ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா, ஏப்ரல் 17 அன்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தேவையான 352 வாக்குகளுக்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தன; அதாவது 54 வாக்குகள் குறைவாக இருந்தன.
ஆனால், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களையும், மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற வெற்றியையும் தொடர்ந்து, அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிடும் முனைப்பில் பாஜக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிகாரம், பணம், மிரட்டல் — எதையும் கூச்சமில்லாமல் முன்னெடுக்கிறது. எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளது. பாஜகவின் ஆசியோடு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக குறைந்தபட்சம் 20 கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. சிவசேனா (UBT) கட்சிக்குள் நடைபெறும் மாற்றங்கள் மேலும் ஆறு வாக்குகளைச் சேர்க்கக்கூடும்.
பெண்கள் இடஒதுக்கீட்டிற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் உறுதியான ஆதரவாளராக உள்ள திமுகவின் நிலைப்பாடு இந்த சூழலில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில், பாஜகவின் அரசியல் விளையாட்டுக்கு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவான வாதங்களை முன்வைத்தனர். சமீபத்திய இந்தியா கூட்டணி (INDIA bloc) கூட்டத்தில் அவர்கள் பங்கேற்காமல் நின்றனர். காங்கிரஸ் மீதான நியாயமான அதிருப்தி இருந்தபோதிலும், அவர்கள் தம் நிலைப்பாட்டைத் தொடர்வார்கள் என்றே நம்பலாம்.
நமது கோரிக்கைகள்
பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி எண்ணிக்கை உயர்வு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைக்கும் அரசின் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.
அத்தனைக்குப் பிறகும் இவ்வாறு இணைத்து முன்னெடுப்பது தொடருமானால், வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் — குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் — பெண்கள் மீண்டும் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாத நிலைக்கு ஆளாவார்கள்.
2014ஆம் ஆண்டில், நாட்டின் மொத்தம் 4,123 சட்டமன்ற இடங்களில் பெண்களின் சராசரி பிரதிநிதித்துவம் 11 சதவீதமாக இருந்தது. மோடி ஆட்சியின் பத்தாண்டு காலத்திற்குப் பின்னரும், ‘இரட்டை எஞ்சின் அரசுகள்’ பெருகிய பின், அந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகச் சரிந்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாட்டில் வெறும் 390 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலை தொடர்ந்திருக்காது. மொத்தம் 1,375 பெண் உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என்று 2026 மார்ச் மாதத் தரவுகள் காட்டுகின்றன.
எனவே, 131ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கான மோடி அரசின் அரசியல் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பது மட்டுமே நமது கோரிக்கையல்ல. நாரி சக்தி வந்தன் அதினியத்தின் (NSVA) பிரிவு 334A மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் திருத்தம் செய்து, பெண்கள் இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கும் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக நீக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும். பெண்களுக்கு நீதி செய்வதாகவும், ஜனநாயகத்திற்கு நீதி செய்வதாகவும், இந்தியா மிக நீண்டகாலமாக தொடரும் மகளிரின் ஜனநாயகப் போராட்டத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதாகவும் அதுவே இருக்கும்.
தமிழில்: இரா.சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply